×

அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம்

திருவண்ணாமலை, நவ.14:  திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்று மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் மேற்கொண்டனர்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் அரசாணை 56ஐ ரத்து செய்ய வேண்டும். அரசு துறையில் அவுட்சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிடவேண்டும். தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள நாலரை லட்சம் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 18ம் தேதி கோட்டை நோக்கி பேரணி செல்ல இருக்கின்றனர். இதையொட்டி தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் வேன் மூலம் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்த வேன் பிரசாரம் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்றது. ஆரணியில் நேற்று காலை தொடங்கிய இந்த பிரசார இயக்கம் சேத்துப்பட்டு, போளூர், கலசபாக்கம் வழியாக திருவண்ணாமலை வந்தனர். அங்கு கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், காந்தி சிலை ஆகிய இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொண்டனர்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.ஜோதி சங்கர் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் மு.பாஸ்கரன், மாநில துணைத்தலைவர்கள் ஏ.பெரியசாமி, கோ.பழனியம்மாள் உட்பட பலர் பேசினர்.ஆரணி: ஆரணி தாலுகா அலுவலகம் முன் நேற்று, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க வட்டக்கிளை தலைவர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் பாஸ்கரன், மாவட்ட தலைவர் ஜோதி சங்கர், செயலாளர் பிரபு முன்னிலை வகித்தனர். வட்ட செயலாளர் பரசுராமன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் பழனியம்மாள் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் கல்வி நிர்வாக அலுவலக சங்க மாநில தலைவர் சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டக்கிளை பொருளாளர் விஜயகுமார் நன்றி கூறினார்.இதேபோல், சேத்துப்பட்டு தாலுகா அலுவலகம் முன் நேற்று, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் நடந்தது. இதில் வட்டத்தலைவர் பாபு, செயலாளர் முத்துவேலன், பொருளாளர் பாபு, தாசில்தார் ஹரிதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Meeting ,
× RELATED ஏஐடியூசி போக்குவரத்து சம்மேளன குழு கூட்டம்