×

கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை வாகனம்

சிவகங்கை, நவ. 14: சிவகங்கையில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் நடமாடும் அவசர கால்நடை மருத்துவ சிகிச்சை(அம்மா அவசர சிகிச்சை வாகனம்) வாகன தொடக்க விழா நடந்தது. கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்து பேசியதாவது:இந்த வாகனத்தின் மூலம் கால்நடைகள் இருக்கும் இடத்திற்கு சென்று தேவையான சிகிச்சை வழங்குவதற்காக வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. நோயால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெறவேண்டிய கால்நடைகளுக்கு வாகனம் மூலமாக எடுத்து வந்து கால்நடை மருந்தகத்தில் சிகிச்சை பெறுவதற்கு ஏற்ப கால்நடைகளை தூக்க பெல்ட்டுடன் கூடிய லிப்ட் வசதி உள்ளது.

இந்த வாகனத்தை தொடர்பு கொள்ள 1962 என்ற கட்டணமில்லா அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். கிராமப் பகுதிகளில் கால்நடை வளர்ப்போருக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த வாகனத்தில் ஒரு கால்நடை உதவி மருத்துவர், கால்நடை பராமரிப்பு உதவியாளர், வாகன ஓட்டுநர் தயார் நிலையில் இருப்பார்கள். இவ்வாறு பேசினார். இந்நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் முருகேசன், துணை இயக்குநர் ராஜதிலகம், கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குநர்கள் முகமதுகான், ராம்குமார், கால்நடை மருத்துவர் ராஜேஷ், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட கூட்டுறவு அச்சுத்துறை சங்கத்தலைவர் சசிக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி