திருவண்ணாமலை, நவ.14: திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளுக்கு, திறன் பயிற்சி அளிப்பது தொடர்பான பயிலரங்கம் மற்றும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை(வெள்ளி) காலை 10 மணியளவில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
பயிலரங்கில் 10க்கும் மேற்பட்ட திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் திறன் பயிற்சியின் முக்கியத்துவம், பயன்கள், திறன் மேம்பாட்டு கழகத்தால் வழங்கப்படும் பல்வேறு இலவச பயிற்சிகள், தொழில் முனைவோராக விரும்பும் இளைஞர்களுக்கான அரசு திட்டங்கள் போன்ற பல்வேறு முக்கிய தலைப்புகளிலான சிறப்புரைகள் நிகழ்த்தப்பட உள்ளது.
இப்பயிலரங்கத்தில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐடிஐ, பாலிடெக்னிக் கல்வி தகுதி உடையவர்கள், அனைத்து அசல் கல்வி சான்றுகள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகியோ அல்லது 04175- 233381 என்ற மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோ உரிய விவரங்களை பெற்று கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.