கிருஷ்ணகிரி, நவ.14: கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில், லிப்ட் பழுதானதால் மாற்றத்திறனாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். கிருஷ்ணகிரியில் ராயக்கோட்டை சாலையில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் செயல்பட்டு வருகிறது. இதில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய நீதிமன்ற வளாகம் திறக்கப்பட்டது. தற்போது 10 நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் இரண்டாவது மாடியில் விபத்து தீர்வுக்கான நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது. இந்த நீதிமன்றத்திற்கு வாகன விபத்துகளில் பாதிக்கப்பட்டு கால்களை இழந்த மற்றும் பல்வேறு வகையில் ஊனமுற்றோர் வருகின்றனர். அவர்கள் லிப்ட்டை பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக அந்த லிப்ட் பழுதாகி உள்ளது. இதனால், நீதிமன்றத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் பிறர் உதவியுடன் படிக்கட்டுகளில் ஏறி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. உதவி செய்ய யாரும் முன்வரவில்லை என்றால், கீழ்தளத்திலேயே காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே, மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி, உடனடியாக பழுதான லிப்ட்டை சரி செய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.