×

தமிழக-கேரள போலீசார் ஆலோசனை கூட்டம்

கூடலூர், நவ.13:  சபரிமலை சீசனை ஒட்டி கோவிலுக்குச் சென்று திரும்பும் பக்தர்களுக்கு இருமாநில எல்லையான குமுளியில் செய்யவேண்டிய அடிப்படை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தேனி, இடுக்கி மாவட்ட போலீசாரின் ஆலோசனைக்கூட்டம் தேக்கடியில் நடைபெற்றது. ஆலோசனைக்கூட்டத்தில் தற்போது சபரிமலை சீசன் தொடங்க உள்ள நிலையில், பக்தர்கள் சிரமமின்றி பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளவும், போக்குவரத்து இடையூறு இல்லாமல் சென்று திரும்ப கோவிலுக்கு செல்பவர்கள் கம்பத்தில் இருந்து கம்பம்மெட்டு வழி ஒருவழிப்பாதை அமல்படுத்துவது குறித்தும், குமுளியில் சாலையோரங்களில் வாகனங்கள் நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதை தவிர்ப்பதற்கான தீர்வு குறித்தும் அதிகாரிகள்  பேசினர்.

மேலும் தமிழக கேரள எல்லையோரப்பகுதிகள் வழியாக போலி மது, கஞ்சா, எரிசாராயம் மற்றும் போதைப்பொருள் கடத்துவதை தடுக்கும் விதமாக இருமாநில எல்லைகளில் உள்ள சோதனைச்சாவடியில் சோதனைகளை பலப்படுத்துவது, மேலும் தமிழகத்தில் குற்றச்செயலில் ஈடுபட்டு கேரளா செல்லும் குற்றவாளியை கேரளப் போலீசாரின் உதவியுடன் பிடிப்பது, கேரளாவில் குற்றம் செய்துவிட்டு தமிழகம் வரும் குற்றவாளிகளை தமிழக போலீசாரின் உதவியுடன் பிடித்து ஒப்படைப்பது குறித்தும் அதிகாரிகள் பேசினர்.
நிகழ்ச்சியில் தமிழகம் சார்பாக தேனி மாவட்ட ஏடிஎஸ்பி மோகன்குமார், உத்தமபாளையம் டிஎஸ்பி சின்னக்கண்ணு, இன்ஸ்பெக்டர்கள் போடி சுரேஷ்குமார், பெரியகுளம் ஷாஜகான், கேரளா சார்பாக இடுக்கி மாவட்ட ஏடிஎஸ்பி சுகுமாறன், கட்டப்பனை டிஎஸ்பி ராஜமோகன், குமுளி இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tamil Nadu ,Kerala Police Advisory Meeting ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...