திருப்பூர், நவ. 13: பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளராக ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது அறிமுக கூட்டம் திருப்பூர் பல்லடம் ரோட்டில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் அதிகப்படியான இடங்களில் போட்டியிடுவது, பிளாஸ்டிக் இல்லா திருப்பூராக மாற்ற 2 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து கொடுப்பவருக்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். திருப்பூர் நொய்யல் வீதியில் சுகாதாரமற்ற முறையில் செயல்படும் இறைச்சி கடைகளை அகற்ற வேண்டும், மழைக்காலங்களில் நொய்யல் கரையோரம் சாயக்கழிவுநீர் கலப்பதை கண்காணித்து மாசுக்கட்டுபாட்டு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார்.
தெற்கு மாவட்ட செயலாளர் அசோக்ராஜ் வரவேற்று பேசினார். வடக்கு மாவட்ட செயலாளர் பிரதீப் குமார், தெற்கு மாவட்ட தலைவர் சரவணன், தெற்கு நகர செயலாளர் மணிகண்டன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் வடிவேல், மாநில சிறுபான்மை பிரிவு தலைவர் சையத் மன்சூர் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் நிர்வாகிகள் சுந்தரி பாலசந்தர், காளியப்பன், ராஜேந்திரன், கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மகளிரணி பேரூராட்சி செயலாளர் ஐஸ்வர்யா குமரேசன் நன்றி கூறினார்.