×

50 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனத்திடம் கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்

ஈரோடு, நவ. 13: ஆழ்துளை கிணறு அமைக்க கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தி உள்ளது.  இதுகுறித்து அக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒரு விபத்து நடந்தால் அந்த விபத்தை தடுப்பதற்கான முயற்சிகளில் அரசு இறங்குவது தேவைதான். ஆனால், நடைமுறை சாத்தியமற்ற கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலில் இருக்கும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பெரும்பாலும், கொங்கு மண்டலத்தில்தான் ஆழ்துளை கிணறு அமைக்கும் தொழிலை நம்பி இருப்பவர்கள் அதிகம்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பதிவு செய்ய வேண்டுமென்றால் 5 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் வேண்டும். இது நடைமுறை சாத்தியமற்றது. ஒருமாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பது தான் நோக்கம். கட்டணமாக இவ்வளவு தொகை வசூலிக்க முயற்சி செய்ய கூடாது.  பொருளாதார தேக்க நிலையும், ஜிஎஸ்டி வரி விதிப்பினால் முடங்கிய போய் இருக்கும் ஆழ்துளை கிணறு அமைக்கும் நிறுவனங்களுக்கும் மேலும் சிக்கல்களை உருவாக்கும் வகையில் தமிழக அரசின் உத்தரவு அமைந்துள்ளது. 50 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக இந்த உத்தரவுகளில் இருக்கும் கட்டண வசூலை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

Tags : well drilling company ,families ,
× RELATED களைகட்டிய தேர்தல் திருவிழா.....