ஸ்ரீவைகுண்டம், நவ.13:ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் கோவிலில் உற்சவர் தினத்தையொட்டி கருடசேவை நடந்தது. தாமிரபரணி கரையோரத்திலுள்ள நவதிருப்பதிகளில் முதன்மை ஸ்தலமாக ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமி கோயில் அமைந்துள்ளது. ஆன்மிக சிறப்புபெற்ற இக்கோயிலில் பெருமாளின் அவதார தினத்தை முன்னிட்டு சிறப்பு கருடசேவை நடைபெற்றது. இதையொட்டி அன்று காலை 7மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது. இரவில் உற்சவர் கள்ளபிரான், வைகுண்டநாயகி, சோரநாதநாயகி தாயார்களுடன் சயனகுறட்டிற்கு எழுந்தருளி சிறப்பு திருமஞ்சனமும், நாலாயிர திவ்யபிரபந்த கோஷ்டியும், தீபாராதனையும் நடைபெற்றது.
அதன்பின்பு, உற்சவர் கருடவாகனத்தில் எழுந்தருளி கோயில் ரத வீதிகளில் உலாவந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். இதில், ஸ்தலத்தார்கள் ராஜப்பாவெங்கடாச்சாரி, சீனிவாசன், தேவராஜன், ஸ்ரீகிருஷ்ணன், அர்ச்சகர்கள் வாசு, நாராயணன், அமேஷ், ராமானுஜம், சீனு, வேதபாராயணர்கள் சீனிவாசன், பார்த்தசாரதி, வைகுண்டராமன், சீனிவாசதாத்தம், சம்பத், ஜெகநாதன் மற்றும் பக்தர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.