×

கோட்டையூர் ஆர்.ஐக்கு கொலை மிரட்டல் நடவடிக்கை எடுக்கக்கோரி வருவாய்த்துறை ஆர்ப்பாட்டம்

வத்திராயிருப்பு, நவ. 12: கோட்டையூர் ஆர்.ஐக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி வத்திராயிருப்பு தாலுகா அலுவலகத்தில் வருவாய்த் துறையினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். வத்திராயிருப்பு அருகே, கோட்டையூரில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிவர் மாரியப்பன் (41). இவர், அலுவலகத்தில் பணி செய்து கொண்டிருந்தபோது, அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த தேவசகாயம் என்பவர் வருவாய் ஆய்வாளரை, அரசு பணி செய்யவிடாமல் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதை மாரியப்பன் தனது செல்போனில் வீடியோ எடுக்க முயன்றபோது தேவசகாயம், அவரை கன்னத்தில் அடித்ததோடு, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வத்திராயிருப்பு போலீசில் வருவாய் ஆய்வாளர் மாரியப்பன் கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, தேவசாகயத்தை தேடி வருகின்றனர்.

இந்நிலையில், கோட்டையூர் ஆர்.ஐக்கு கொலை மிரட்டல் விடுத்த தேவசகாயத்தை கைது செய்ய வலியுறுத்தி, வத்திராயிருப்பு தாலுகா அலுவலகம் முன்பு, வருவாய்த்துறையினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வருவாய்த்துறை சங்க மாவட்ட தலைவர் ராமநாதன் தலைமை வகித்தார். வட்டச்செயலாளர் ராமகிருஷ்ணன் வட்ட கிளைத்தலைவர் ஆனந்தகிருஷ்ணன் உள்பட பல அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Revenue protest demonstration ,
× RELATED தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்...