×

போச்சம்பள்ளியில் பருவம் தவறிய மா சீசன் துவக்கம் டன் ₹50 ஆயிரத்திற்கு விற்பனை

போச்சம்பள்ளி, நவ.12: போச்சம்பள்ளியில், பருவம் தவறிய மாங்காய் விளைச்சலையொட்டி சீசன் துவங்கியது. ஒரு டன் ₹50 ஆயித்திற்கு விற்பனை செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மா சாகுபடியில் போச்சம்பள்ளி தாலுகா 2ம் இடம் வகிக்கிறது. இங்கு அல்போன்சா, பங்கனப்பள்ளி, நீலம், செந்தூரா, மல்கோவா, பீத்தர் ஆகிய ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. பொதுவாக டிசம்பர் இறுதி வாரம் முதல் ஜனவரி இறுதிக்குள் மாமரங்களில் பூக்க தொடங்கி ஜூன், ஜூலை மாதத்தில் மா அறுவடை செய்யப்படும். கடந்த ஆண்டு  விளைச்சல் அமோகமாக இருந்த நிலையில், யாரும் விலைக்கு வாங்க முன்வரவில்லை. இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்தனர். இந்த பிரச்னையை சமாளிக்க, போச்சம்பள்ளி, பெரியகரடியூர், ஓலைப்பட்டி, சாலமரத்துப்பட்டி, தாதம்பட்டி, ஒட்டதெரு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில், மா விவசாயிகள் கடந்த சில வருடங்களாக சுமார் 20 ஏக்கர் பரப்பில் பருவம் தவறிய மா சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் மூலம் மா மரங்கள் ஜூலை மாதம் பூக்க துவங்கி அக்டோபர், நவம்பர் மாதத்தில் அறுவடைக்கு தயாராகிறது. தற்போது பருவம் தவறிய சீசன் துவங்கியுள்ளதால், மா அறுவடையில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: பருவமழை பொய்த்து போனதால் ஏற்படும் நஷ்டத்தை தவிர்க்க, தோட்டக்கலை அதிகாரிகளின் ஆலோசனைபடி பருவம் தவறிய நிலையில் பெங்களூரா மற்றும் செந்தூரா ரகங்களை சாகுபடி செய்தோம். தற்போது மரங்களில் ஏராளமான காய்கள் காய்த்து தொங்குகிறது. இதனால், அறுவடை செய்து வருகிறோம். சீசன் நேரத்தில் ஒரு டன் மாங்காய் ₹10 ஆயிரம் முதல் ₹12 ஆயிரம் வரை விற்பனையானது. தற்போது பருவம் தவறிய சீசனில், ஒரு டன் மாங்காய் ₹40 ஆயிரம் முதல் ₹50 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இங்கு விளையும் மாங்காயை, வியாபாரிகள் தோட்டங்களுக்கே நேரடியாக வந்து வாங்கி செல்கிறார்கள்,’ என்றனர்.

Tags : Launch ,Bochampalli ,
× RELATED போச்சம்பள்ளி அருகே பயங்கரம்...