ஓசூர், நவ.12: ஓசூர் பகுதியில் பஸ் படிக்கட்டில் நின்றவாறு மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். இதை தவிர்க்க கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும் என மாணவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஓசூர்-தேன்கனிக்கோட்டை சாலை பகுதியில் 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவும், மாணவ, மாணவிகள் கல்வி நிறுவனங்களுக்கு செல்லவும் ஓசூர் அல்லது தேன்கனிக்கோட்டைக்கு தான் செல்ல வேண்டியுள்ளது. மேலும், அஞ்செட்டி சுற்றுப்புற கிராமங்களில் வசிப்பவர்கள், தேன்கனிக்கோட்டை தாலுகாவை சேர்ந்த அனைவரும் ஓசூருக்கு வரவேண்டியுள்ளது. இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்படும் பஸ்களில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது. குறித்த நேரத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக, மாணவ, மாணவிகள் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி, ஆபத்தான பயணம் செய்கின்றனர். இதனால், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுகிறது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி, காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமாவது கூடுதல் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.