ஊட்டி, நவ. 12: முதல் சீசனுக்கான பணிகள் துவக்கப்பட்டுள்ள நிலையில், தாவரவியல் பூங்காவில் உள்ள 35 ஆயிரம் தொட்டிகளை தயார் செய்யும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தாவரவியல் பூங்காவில் அடுத்த ஆண்டு மே மாத சீசனுக்காக விதைப்பு பணிகள் துவங்கி நடந்து வருகிறது. அதேபோல், 35 ஆயிரம் தொட்டிகளில் நடவு பணிக்காக மண் நிரப்பும் பணிகள் துவக்கப்படவுள்ளது. இதற்காக, இரண்டாம் சீசனுக்கு நடவு செய்யப்பட்டிருந்த மலர் செடிகளை அகற்றி புதிய மண் நிரப்பும் பணிகளை துவக்குவதற்காக தொட்டிகளை ஊழியர்கள் தயார் செய்து வருகின்றனர். தொட்டிகள் தயாரானவுடன், உரம் கலந்த மண் தொட்டிகளில் நிரப்பப்படும். அதன்பின், வளரும் காலங்களை பொருத்து தொட்டிகளில் விதைப்பு மற்றும் நடவு பணிகள் மேற்கொள்ள பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விதைப்பு மற்றும் நடவு பணிகள் படிப்படியாக நடந்து வரும் நிலையில், இனி ஏப்ரல் மாதமே தாவரவியல் பூங்காவில் மலர்களை காண முடியும். அதுவரை கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள், கள்ளிச் செடிகள் மற்றும் பெரணி செடிகளை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க முடியும்.