×

கடம்பூர் மலைப்பகுதியில் கனமழையால் கன்னிமடுவு அருவியில் வெள்ளம்

சத்தியமங்கலம், நவ.12: சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் அத்தியூர், கம்பத்ராயன்கிரி பகுதியில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை நீர் சத்தியமங்கலம் அருகே உள்ள புளியங்கோம்பை கிராமம் அருகே கன்னிமடுவு அருவி வழியாக வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் ஓடி பவானி ஆற்றில் கலக்கிறது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கன்னிமடுவு அருவியில் பாறைகளை தழுவியபடி வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி காண்போர் கண்களுக்கு விருந்தளிக்கும் விதமாக அமைந்துள்ளது.  இந்த அருவி இரண்டு மலைகளுக்கு இடையே பள்ளத்தாக்கு பகுதியில் உள்ளதால் பொதுமக்கள் பார்க்க முடியாது. அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல அனுமதி இல்லை என்பதால் இப்படி ஒரு அருவி உள்ளது என்பது சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதி பொதுமக்களுக்கு தெரியவில்லை. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கன்னிமடுவு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டும் சத்தம் வனப்பகுதியில் எதிரொலிக்கிறது. வனப்பகுதியில் உள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் வனவிலங்குகளின் குடிநீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Tags : Kadampur ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் பழங்குடி மக்களின் பண்பாட்டுத்திருவிழா