×

கோவை மாவட்டத்தில் போக்குவரத்து பணிமனைகளில் கான்கிரீட் தளங்கள் அமைக்கப்படுமா?

கோவை, நவ.12: கோவை மாவட்டத்தில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை வளாகங்களில் கான்கிரீட் தளங்கள் அமைக்க  ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய 4 மண்டலங்கள் உள்ளன. இவைகளில் 40க்கும் மேற்பட்ட அரசு பணிமனைகளில் இருந்து தினந்தோறும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்தில் உக்கடம் 1, 2, சுங்கம் 1, 2, ஒண்டிப்புதூர் 1,2, சூலூர், உப்பிலிபாளையம், தலைமையகம், அன்னூர், மருதமலை, கருமத்தம்பட்டி உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட அரசு போக்குவரத்து பணிமனைகள் உள்ளன. இவைகளில் வளாகத்தில் கான்கிரீட் தளங்கள் இல்லாததால் மழை காலங்களில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பேருந்துகளை இயக்க வரும் ஓட்டுநர்கள், நடத்துனர்கள் சேற்றில் நடந்தபடி பேருந்துக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் சேற்றில் வழுக்கி விழும் சம்பவங்களும் நடந்து வருகிறது. இதனால் மழை காலங்களில் மட்டும் பணிமனை வளாகத்தில் மழைநீர் தேங்காமல் தற்காலிக நடவடிக்கை எடுக்கப்படும், இதற்கு நிரந்தர தீர்வு காண மற்ற மாவட்டங்களில் உள்ள பணிமனைகளை போல வளாகம் முழுவதும் கான்கிரீட் தளங்கள் அமைக்க கோவை கோட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போக்குவரத்து கழக ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sites ,traffic workshops ,Coimbatore district ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!