மதுராந்தகம், நவ. 12: மதுராந்தகம் ரயில் நிலையத்தில், பூட்டியே கிடக்கும் கழிப்பறைகளால், பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். சென்னை - திருச்சி ரயில்வே மார்க்கத்தில், மதுராந்தகம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து தினமும் 1000க்கும் மேற்பட்ட மக்கள் சென்னைக்கு ரயில் மூலம் பல்வேறு பணிகளுக்கு சென்று வருகின்றனர். குறிப்பாக, மதுராந்தகம், சித்தாமூர், செய்யூர், சூனாம்பேடு உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் காலை வேளைகளில் ஆண், பெண்கள் என மதுராந்தகம் ரயில் நிலையத்தில் இருந்து ஆயிரக்கணக்கானோர் ரயில் மூலம் தாம்பரம், சென்னை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு பள்ளி, கல்லூரி, வியாபாரம், மருத்துவம், வேலை என பல்வேறு காரணங்களுக்காக சென்று வருகின்றனர்.ரயில் பயணிகளின் வசதிக்காக மதுராந்தகம் - சென்னை மார்க்கத்தில் ரயில்வே பாலத்தை ஒட்டி கழிப்பறை கட்டப்பட்டுள்ளது.
இந்த கழிப்பறை, பயணிகளின் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல், எப்போதும் பூட்டியே கிடக்கிறது. இதனால் ஆண், பெண்கள் என இருபாலருக்கும் தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள, இந்த கழிப்பறையை பயணிகள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.இதையொட்டி பலர் கடும் அவதியடைகின்றனர்.இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால், உரிய பதில் அளிப்பதில்லை என குற்றஞ்சாட்டப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வந்து செல்லும் மதுராந்தகம் ரயில் நிலையத்தில் பயணிகளின் பயன்பாட்டுக்கு இல்லாமல் பூட்டியே கிடக்கும் கழிப்பறையை உடனடியாக திறக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.