×

உத்திரமேரூர் அருகே குடியிருப்புகளுக்கு நடுவில் எம் சாண்டு அரவை தொழிற்சாலைக்கு மின் இணைப்பு கொடுக்கும் பணி தீவிரம்

உத்திரமேரூர், நவ.12: உத்திரமேரூர் அடுத்த பழவேறி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் பல்வேறு தனியார் கல்குவாரிகள் மற்றும் கல்அரவை தொழிச்சாலைகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் பூமியில் இருந்து கற்கள் உடைக்க வெடி வைப்பதால், கிராமங்களில் உள்ள வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, சுவர்களில் விரிசல் ஏற்படுகிறது. மேலும், கல்குவாரிக்கு வரும் லாரிகள், கிராம சாலைகளில் அதிக பாரத்துடன் அசுர வேகத்தில் செல்வதால், சாலை பழுதாகி போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அடிப்படி விபத்துக்களும் ஏற்பட்டு, சில உயிரிழப்பு சம்பவங்களும் நடந்துள்ளன. மேலும், கல்அரவை தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகைகளால், கிராம மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்படுவதுடன், விவசாய பயிர்களில் படிந்து பயிர்கள் நாசமாகி விவசாயம் பாதிக்கப்படுகிறது.  இதுபோன்ற கல்குவாரிகள் மற்றும் கல்அரவை தொழிற்சாலைகள் கனிமவளங்களை கொள்ளையடிப்பது மட்டுமின்றி இயற்கை வளங்களையும் அழித்து வருகின்றன.

இந்நிலையில் சீத்தாவரம் கிராமத்தில் உள்ள எம் சாண்டு தயாரிக்கும் கல்அரவை தொழிற்சாலைக்கு, அதிக மின்திறன் கொண்ட மின்சாரம் கொண்டு செல்வதற்காக கிராம மக்கள் குடியிருக்கும் பகுதிகளுக்கு நடுவே கம்பங்கள் அமைக்கும் நேற்று பணி நடந்தது.
இதை கண்ட கிராம மக்கள், இந்த கம்பங்களை மாற்று பாதையில் கொண்டு செல்ல வேண்டும். குடியிருப்பு பகுதிகளில் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து, மின்வாரிய ஊழியர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, பொதுமக்களிடம் சமரசம் பேசினர். பின்னர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். கம்பம் அமைக்கும் பணியும் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ஏற்கனவே கிராம மக்கள் இந்த கல்குவாரி மற்றும் கல்அரவை தொழிற்சாலைகளால் பல விதத்தில் பாதிக்கபடுகிறோம். இந்த வேளையில் குடியிருப்பு பகுதியில், தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் கொண்டு செல்வதற்கு, கம்பங்கள் அமைப்பதால், சாலை அருகே உள்ள குடிநீர் குழாய் உடைவதுடன் சாலை பழுதாகும் நிலை உள்ளது. மேலும் சாலை விரிவாக்கப்பணிக்கு இந்த கம்பங்கள் மிகவும் தடையாக இருக்கும். இந்த கம்பங்கள் அமைத்தால் அதன் அருகே உள்ள தெருவிளக்குகள் பழுதுபார்ப்பது என்பது கேள்விக்குறியாகிவிடும். இந்த மின்வயர்களில் பழுது ஏற்பட்டால் மின் விபத்தின் பாதிப்பு மிகவும் மிக அதிகமாக இருக்கும். எனவே இந்த கம்பங்களை அமைக்கக் கூடாது என்றனர்.

Tags : factory ,M Sandhu ,Uthramerur ,
× RELATED 97 பேர் பங்கேற்பு பெரம்பலூர் அருகே...