×

வீராணம் குழாயில் உடைப்பு சாலையில் ஆறாக ஓடும் தண்ணீர்

கூடுவாஞ்சேரி, நவ. 12: வண்டலூர் அருகே வீராணம் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், அதில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதனால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைகின்றனர். சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. 18 கிமீ கொண்ட, 4 வழிசாலையான இங்கு கொளப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் தோல் கம்பெனி எதிரே பழமையான தரைப்பாலத்தை அகற்றிவிட்டு பல லட்சம் மதிப்பில் புதிய தரைப்பாலம் அமைக்கும் பணி நடந்து முடிந்துள்ளது.மற்றொரு புறம், மந்தகதியில் நடந்து வந்த பாலப்பணி, தற்போது முடிவடைந்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு இதுவரை திறக்கவில்லை. இதனால், சாலையின் இருபுறமும் எதிரும், புதிருமாக வாகனங்கள் போட்டி போட்டு கொண்டு செல்வதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதியடைகின்றனர்.

பாலப்பணி நடக்கும் பகுதியில், சென்னை மக்களுக்கு தாகத்தை தீர்க்கும் வீராணம் குடிநீர் ராட்சத குழாய் அமைந்துள்ளது. இந்த குழாயில், கடந்த வாரம் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால், இதில் இருந்து குடிநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது. இதையொட்டி, அவ்வழிகா வேகமாக பைக்கில் வருபவர்கள், விழுந்து படுகாயமடைகின்றனர். இதில் எதிரும், புதிருமாக வரும் வாகனங்களால் பெரும் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் கண்டும், காணாமல் உள்ளனர். எனவே, மாவட்ட நிர்வாகம், மேற்கண்ட பகுதியில் சாலையில் ஆறாக ஓடும் வீராணம் குடிநீரை சேமிக்க உரிய நடடிக்கை எடுக்க வேண்டும். குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

Tags :
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...