×

கார் மோதி தலைமை காவலர் பலியான வழக்கில் விபத்து ஏற்படுத்திய மாணவர் மாற்றுத்திறனாளியா?

சென்னை, நவ. 12: தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை, நியூகாலனி, 3வது தெருவைச் சேர்ந்தவர் ரமேஷ் (46). இவர் சேலையூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பணி முடித்து வீட்டிற்கு செல்லும்போது தாம்பரம் கடப்பேரி பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் கார் ரேஸில் ஈடுபட்டு வந்த கார் ஒன்று ரமேஷின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் ரமேஷ் சுமார் 20 அடிக்கு தூக்கி எறியப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவம் குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரி பகுதியை சேர்ந்த ஆதித்யா (21) என்பவரை கைது செய்தனர். ஆதித்யா காட்டாங்கொளத்தூர் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் பானுமதி கூறியதாக சக போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:

பத்ம சில மாதங்களுக்கு முன் ஆதித்யாவிற்கு ஹூண்டாய் ஐ10 காரை வாங்கி கொடுத்துள்ளார். அந்த காருக்கு மாதம் தோறும் ₹8000 முதல் ₹10,000 வரை மாத தவணையை கட்டி வந்துள்ளார். ஆதித்யா கை, கால்கள் வளைந்து உடல் அளவில் சற்று பாதிக்கப்பட்டவர் போல் காணப்படுவதாகவும், அவர் எழுந்து நிற்கும்போது பார்த்தால் அவர் தான் இந்த விபத்தை ஏற்படுத்தி இருப்பாரா? என்ற சந்தேகம் எழுவதாகவும் ஆய்வாளர் தெரிவித்தார். அவரது காரை செங்கல்பட்டு அருகே உள்ள ஒரு வட இந்திய தொழிலதிபரிடம் சில மாதங்களுக்கு முன்பு கொடுத்து மாற்றி உள்ளார் என ஆய்வாளர் பானுமதி கூறியதாக சக போலீசார் தெரிவித்தனர். இவை குறித்தும், ஆதித்யா மாற்றுத் திறனாளி தானா என்பது குறித்தும் ஆய்வாளர் பானுமதியிடம் விசாரிக்க அவரை செல்போனில் அழைத்தபோது மழுப்பலாக பதில் கூறியும், “என் விசாரணையில் தலையிட யாருக்கும் உரிமையில்லை” எனக்கூறி இணைப்பை துண்டித்தார். காவலர் விபத்தில் இறந்தும் விபத்தை ஏற்படுத்தியவரை கைது செய்யாமல் அவருக்கு ஆதரவாக புலனாய்வு பிரிவு போலீசார் செயல்படுவது சக போலீசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : accident ,car collision head guard ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!