×

திருவள்ளூர் அருகே செயல்படும் ஆசிரமத்தில் கேரள மந்திரவாதி சடலம் அழுகிய நிலையில் மீட்பு: அடித்துக் கொலையா? போலீசார் விசாரணை

சென்னை: திருவள்ளூர் அருகே ஆசிரமத்தில் கேரள மந்திரவாதி சடலத்தை அழுகிய நிலையில் போலீசார் மீட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரை யாராவது அடித்து கொலை செய்தனரா, வேறு காரணமா என விசாரணை நடந்து வருகிறது. கேரள மாநிலத்தை சேர்ந்தவர் பனிக்கர் (68). சென்னை வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வந்தார். இவர், திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூரில் ஆசிரமம் ஒன்றை கட்டி, அங்கு பவுர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் மாந்திரீகம் மற்றும் ஜோதிடம் பார்த்து வருவது வழக்கம்.

கடந்த 20 ஆண்டுகளாக இதில் ஈடுபட்டு வந்த  பனிக்கர் வழக்கம்போல், கடந்த வாரம் அமாவாசையை முன்னிட்டு வில்லிவாக்கம் வீட்டிலிருந்து புறப்பட்டு திருப்பாச்சூர் ஆசிரமத்துக்கு வந்துள்ளார். அமாவாசை முடிந்தும் வீட்டிற்கு வராததால், அவரது மகன் சங்கர் செல்போனில் தனது தந்தையிடம் கடந்த வாரம் பேசினார். அப்போது, ‘இங்கு வேலை உள்ளது. அதை முடித்துவிட்டு வருகிறேன்’ என கூறியுள்ளார். இந்நிலையில், நேற்று ஆசிரமம் அருகே அப்பகுதி மக்கள் மேய்ச்சலுக்காக ஆடு, மாடுகளை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்போது ஆசிரமம் அருகே பிணவாடை வீசியது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவள்ளூர் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன், எஸ்.ஐ., கணேஷ் மற்றும் போலீசார் வந்தனர். ஆசிரமத்துக்குள் நுழைந்து சோதனை நடத்தினர். அங்கு, கையில் ரத்த காயங்களுடன், பனிக்கரின் உடல் அழுகிய நிலையில் கிடந்ததை கண்டனர்.
தொடர்ந்து, அழுகிய சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர், உடல் நலக்குறைவால் உயிரிழந்தாரா, யாரேனும் அடித்துக் கொலை செய்துவிட்டு தப்பினரா, தற்கொலையா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு, திருவள்ளூர் அடுத்த எறையாமங்கலம் பகுதியில், இதேபோல் சாமியார் ஒருவர் மர்ம பொருள் வெடித்ததில் உடல் சிதறி பலியான சம்பவம் நடந்த நிலையில், தற்போது கேரள மாந்திரீகவாதி உடல் அழுகிய நிலையில் மீட்டிருப்பது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : magician ,Kerala ,ashram ,Tiruvallur Police ,
× RELATED ஆடையில் ரகசிய அறை அமைத்து ரூ.14.20 லட்சம்...