×

திருவில்லிபுத்தூர்-ராஜபாளையம் சாலையில் படியும் கண்மாய் கரை மண்

திருவில்லிபுத்தூர், நவ.8: திருவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையின் ஓரம் பெரியகுளம் கண்மாய் கரை மண் படிவதால் டூவீலர்கள் தடுமாறி விழும் அபாயம் நிலவுகிறது. திருவில்லிபுத்தூர் ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியகுளம் கண்மாய் கரை எல்ஐசி அலுவலகம் அருகே தொடங்கி, மடவார் வளாகம் மயானம் அருகே வரை 2 கிலோமீட்டர் தூரம் வரை உள்ளது. பல மாதங்களுக்கு முன்பு கண்மாயின் கரை பலப்படுத்தும் பணி நடைபெற்றது. அப்போது மண் மட்டுமே போட்டு கரையை பலப்படுத்தியதோடு பணியை முடித்துக் கொண்டனர். மழைக்காலங்களில் கரை மண் கரைவதை தடுக்க அலைக்கற்கள் பதிக்காமல் விட்டுவிட்டனர். இதனால் மழைக்காலங்களில் மண் அரிப்பு ஏற்பட்டு சாலையில் மண் படிந்து விடுகிறது. எனவே பெரும் விபத்து ஏற்படும் முன் பெரியகுளம் கண்மாய் கரையில் அலைக்கற்கள் பதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மக்கள் கூறுகையில், நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் திருவில்லிபுத்தூர்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன. இந்த குளத்தின் கரையை பலப்படுத்தும் பணி நடைபெற்ற போது மண் படிந்து இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் விபத்துக்குள்ளாகி மரணமும் ஏற்பட்டது. அதன் பின்னரும் அலைக்கற்கள் பதிக்காமல் கம்பி வேலி அமைத்தனர். தற்போது பெய்துவரும் மழைக்கு கரை மண் கரைந்து சாலையில் படிகிறது. இருசக்கர வாகன ஓட்டிகள் உயிரை கையில் பிடித்துக் கொண்டு சாலையில் பயணிக்கும் அவலம் தொடர்கிறது. இந்த சாலையில் பெரும் விபத்துகள் ஏற்படுவதற்கு முன் பெரியகுளம் கண்மாய் கரையில் அலைக்கற்கள் பதிக்க வேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thiruvilliputtur-Rajapalayam ,road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி