×

முன்விரோதம் தேவதானப்பட்டி அருகே இருவருக்கு கத்திக்குத்து

தேவதானப்பட்டி, நவ. 8: தேவதானப்பட்டியில் முன்விரோதத்தால் ஏற்பட்ட தகராறில் இரண்டு பேருக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேவதானப்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன்(50). இவர் போலீஸ் ஸ்டேஷன் அருகே பழக்கடை வைத்துள்ளார். இவரது மகளை உறவினரான மதுரையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன்(26) என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன் காதல் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் மணிகண்டன் குடும்பத்தினருக்கும், தமிழ்ச்செல்வன் குடும்பத்தினருக்கு முன் விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழ்ச்செல்வன் மற்றும் அவரது உறவினர்கள் தேவதானப்பட்டி தெற்குத் தெருவில் உள்ள உறவினர் துக்கவீட்டிற்கு நேற்று வந்துள்ளனர். அப்போது தமிழ்ச்செல்வனைப் பார்த்த மணிகண்டன் அவரது மகன்கள் சந்தனக்குமார்(28), ஈஸ்வரன்(24) ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது சந்தனக்குமார் தான் வைத்திருந்த கத்தியால் தமிழ்ச்செல்வனை குத்த முயன்றார். அப்போது அதை தடுத்த தமிழ்ச்செல்வனின் அண்ணன் முத்துப்பாண்டி(29), உறவினர் கண்ணன்(50) ஆகியோரை சந்தனக்குமார் கத்தியால் குத்தியுள்ளார். இதனால் படுகாயமடைந்த அவர்கள் இருவரும் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், ஈஸ்வரன் ஆகியோரை கைது செய்தனர். தப்பியோடிய சந்தனக்குமார் மற்றும் சிலரை தேடி வருகின்றனர்.

Tags : Devadanapatti ,
× RELATED விவசாயிகளுக்கு பயிற்சி