நித்திரவிளை. நவ 8: நித்திரவிளை அருகே எஸ்டி மங்காடு கீழ்கரிக்கல் பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் புட் செல் பிரிவில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக உள்ளார். இவர் வீட்டில் பாதுகாப்பிற்காக உயர்ரக, கருப்பு நிற டாக்ஸ்வட் பெண் நாயை வளர்த்து வருகிறார். குள்ளமாக இருக்கும் இந்த நாயை நேற்றுமுன்தினம் இரவு முதல் காணவில்லை. வெளி பழக்கம் இல்லாததால் இந்த நாய் எங்கும் போக வாய்ப்பில்லை. அதனால் சந்தேகமடைந்த ராஜேஷ் அந்த பகுதியில் உள்ள வியாபார நிறுவனங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பார்த்தார்.
அப்போது, ராஜேஷ் வீட்டிற்கு பால் கொண்டு வரும் நபர் நேற்றுமுன்தினம் மதியம் கேட்டை திறக்கும் போது நாய் வெளியே சென்று பக்கத்து வீட்டின் முன் பக்கம் சாலையோரம் நிற்கிறது. அப்போது இளம் தம்பதியர் பைக்கில் நாயை பார்த்துக்கொண்டு வாவறையை நோக்கி செல்கின்றனர். சிறிது தூரம் சென்ற அவர்கள் திரும்ப வந்து சாலையோரம் நின்ற நாயின் அருகில் வந்து நிற்கின்றனர். தொடர்ந்து பைக்கின் பின்னாலிருந்த பெண் இறங்கி போய் நாயை தூக்கி கொண்டு பைக்கில் ஏறி செல்கிறார். நாயை திருடி சென்ற தம்பதியர் பைக் வாவறையை நோக்கி வேகமாக செல்கிறது. இந்த நாய் திருடப்பட்ட சம்பவம் மங்காடு பகுதியில் சுவாரஸ்யமாக பேசப்படுகிறது.