நாகர்கோவில், நவ. 8: ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. உத்தரவின்பேரில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மருத்துவக்கல்லூரி என்எஸ்எஸ் மாணவர்கள், சமூக மருந்தியல் துறை சார்பில் இந்த விழிப்புணர்வு பேரணி மருத்துவக்கல்லூரி வளாகத்தில் நடந்தது. பேரணிக்கு டீன் பாலாஜி நாதன் தலைமை வகித்தார்.
பேரணியில் கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ், உறைவிடமருத்துவர் ஆறுமுகவேலன், உதவி உறைவிடமருத்துவர்கள் விஜயலெட்சுமி, ரெனிமோள், பொதுமருத்துவர் காவேரி கண்ணன், டாக்டர்கள் செல்வகுமார் கிங்சிலி, லெனின் மற்றும் மருத்துவக்கல்லூரி மாணவ,மாணவிகள், செவிலியர் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். பேரணி தொடர்ந்து கல்லூரி பசுமை இயக்கம் சார்பில் கல்லூரி வளாகத்தில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. மரக்கன்றுகளை டீன் பாலாஜி நாதன் நட்டார். பின்னர் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் பேசிய டீன் பாலாஜிநாதன் கூறியதாவது: நல்ல தண்ணீரில் டெங்கு கொசுபுழு உற்பத்தியாகிறது. திறந்த வெளிகளில் நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவ மாணவர்கள், டாக்டர்கள் சமுக பணியாக கருதி பொது இடங்கள், வீடுகளில் நல்ல தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தவேண்டும். என்றார்.