முத்துப்பேட்டை, நவ.8: தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அறங்காவலர் குழு அமைக்கும்போது அக்குழுவில் விஸ்வகர்மா சமூகத்தினர் ஒருவரையும் இடம்பெறச் செய்யவேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க கூட்டம் மாநில பிரதிநிதி மற்றும் முத்துப்பேட்டை தலைவர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் பேராசிரியர் நரேந்திரன், தஞ்சை மாவட்ட தலைவர் மஞ்சவயல் சுப்பிரமணியன், திருவாரூர் மாவட்ட தலைவர் ராஜமாணிக்கம், மதுரை மாவட்ட தலைவர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநிலத் தலைவர் சண்முகநாதன் கலந்துக் கொண்டு பேசினார்.இதில் விஸ்வகர்மா சமூகம் கோயில்களில் சிலை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட ஸ்தபதி வேலைகளை பார்த்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழு அமைக்கும்போது அக்குழுவில் விஸ்வகர்மா சமூகத்தினர் ஒருவரையும் இடம்பெற செய்ய வேண்டும். பிற்படுத்தப்பட்ட இட ஒதுக்கீட்டில் விஸ்வகர்மா சமூகத்துக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் கோவிந்தராஜ், பக்கிரிசாமி பத்தர், இளைஞரணி தலைவர் பிரசாத் உட்பட பலரும் கலந்துக் கொண்டனர். அதன் பின்னர் மாநிலத் தலைவர் சண்முகநாதன் கோவிலூர் அருகே உள்ள விஸ்வகர்மா சமுதாயத்திற்கு சொந்தமான சுடுகாட்டை பார்வையிட்டு சீரமைப்பு பணிகளை எப்படி மேற்கொள்வது என்று நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.