×

வீரமங்கலம் அருந்ததி காலனியில் சிதிலமடைந்து கிடக்கும் தார்சாலை

பள்ளிப்பட்டு, நவ. 8: ஆர்.கே.பேட்டை அடுத்த வீரமங்கலம் ஊராட்சி பந்திக்குப்பம் கூட்டு சாலையில் இருந்து வீரமங்கலம் அருந்ததி காலனி வழியாக தாமினேரி கூட்டு சாலை உள்ளது. இந்த தார்சாலையை வீரமங்கலம், வீரமங்கலம் அருந்ததி காலனி, காலனி, தாமினேரி, காளிகாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது.இச்சாலை வழியாகதான் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் தனியார் மற்றும் அரசு ஊழியர்கள் சென்று வருகின்றனர். அதேபோல், விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு தேவையான இடு பொருட்களை இச்சாலை  வழியாகத்தான் எடுத்து வருகின்றனர். தற்போது இச்சாலை மழை பெய்ததால் தார்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக காணப்படுகிறது.

இச்சாலை வழியாக செல்லும் இருசக்கர வாகன ஒட்டிகள் அடிக்கடி விழுந்து காயமடைந்த சம்பவங்கள் நடந்துள்ளது. இச்சாலையில், தார்கள் பெயர்ந்து ஜல்லி சாலையாக காட்சியளிக்கிறது. இதனால், இச்சாலையில் நடந்து செல்பவர்கள் கூட  காயமடைகின்றனர். மேலும், விவசாயிகளும் தங்கள் இடு பொருட்களை எடுத்து செல்வதற்கு அவதிப்படுகின்றனர். எனவே, இச்சாலையை சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகம் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : ruins ,Weeramangalam Arundhati ,
× RELATED மீனாட்சிபுரத்தில் சிதையும் தொல்லியல்...