×

ஒரே மாதிரியான எழுத்து தேர்வில் தேனி பள்ளி ஆசிரியைகள் தேர்ச்சி

தேனி, நவ. 7: பாரதிதாசன் பல்கலைக்கழகம் மூலமாக நடத்தப்படும் ஆங்கில எழுத்துக்களை ஒரே மாதிரியாக எழுதும் தேர்வில் தேனி முத்துத்தேவன்பட்டி நாடார் உறவின்முறை பள்ளி ஆசிரியைகள் தேர்ச்சி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்றனர்.ஆரம்பக்கல்வியில் ஆசிரியை கற்றுத் தரும் பாடங்கள், எழுத்து எழுதும் முறைகளே மாணவ, மாணவியர் தொடர்ந்து படிப்பில் செயல்படுத்தி வருகின்றனர். இதில் பல ஆசிரியர்கள் பல வடிவங்களில் கரும்பலகையில் எழுதி போடும் எழுத்து வடிவங்களால் மாணவர்கள் தங்களுக்குள் எழுத்து எழுதுவதில் ஒரே சீரான வடிவத்தை பெற முடிவதில்லை. இதனால் மாணவர்கள் பொதுத் தேர்வினை எழுதும்போது, ஒவ்வொரு மாணவர் ஒவ்வொரு மாதிரியாக எழுதும்போது விடைத்தாள் திருத்துவோர் எழுத்து புரியாமல் போகும் நிலை ஏற்படும்.இதனைத் தவிர்க்க கோவை பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆரம்பக் கல்வியான எல்.கே,ஜி. முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு எந்த பள்ளியில் படிக்கிறார்களோ அந்த பள்ளியில் பணிபுரியும் ஆசிரிய ஆசிரியைகள் ஒரே மாதிரியான ஆங்கில எழுத்துக்களை கூட்டெழுத்தில் எழுத கற்பிக்க வேண்டும். இதற்காக முதலில் ஆசிரியைகளை கூட்டெழுத்தில் எழுதும் முறை கற்பிக்கப்படுகிறது.

இதன்படி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் தேனி முத்துத்தேவன்பட்டி நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இணைந்து பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக்கழகம் கொடுத்துள்ள எழுத்துப்பயிற்சி புத்தகத்தில் கொடுத்துள்ள கூட்டெழுத்து வடிவத்தில் ஆங்கில எழுத்துக்களான ஏ,பி.சி, டி முதல் இஜட் வரையிலான 26 எழுத்துக்களை 5 குடும்பங்களாக பிரித்து இந்த எழுத்துக்களை ஒரேமாதிரியாக எழுதும் பயிற்சி ஆசிரியைகளுக்கு அளிக்கப்பட்டது.
இதேபோல தமிழகத்தில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இணைந்து இப்பயிற்சி மேற்கொண்டுள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியைகளுக்கான எழுத்து பயிற்சி போட்டி நடத்தப்பட்டது. இதில் தேனி முத்துத்தேவன்பட்டி நாடார் உறவின்முறை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரியும் இந்தி பாட ஆசிரியை காயத்ரி மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார். இயற்பியல் ஆசிரியை கவிதாதேவி, கணினிஅறிவியல் பாட ஆசிரியை குமுதினி, இந்தி பாட ஆசிரியை அனுப்பிரியா, ஆங்கிலபாட ஆசிரியை கோமதீஸ்வரி, சுகிர்தா ஆகியோரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெற்ற ஆசிரியை காயத்ரி மற்றும் இதர ஆசிரியைகளை இந்து நாடார் உறவின்முறைத் தலைவர் முருகன், பொதுச்செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன், பள்ளி செயலாளர் மகேஸ்வரன், பள்ளி முதல்வர் சுபாஈஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.

Tags : Theni ,school teachers ,
× RELATED தேர்தல் விதிமீறல் குறித்து புகார் தெரிவிக்கலாம்