×

பரிதவிப்பில் கிராம மக்கள் 50 வருடமாக சாலையே இல்லை கலெக்டர் நடவடிக்கை எடுப்பாரா?

காரைக்குடி, நவ.7: காரைக்குடி அருகே 50 வருடங்களுக்கு மேலாக சாலை இல்லாததால் மழை காலங்களில் கிராம மக்கள் ஊருக்குள் நுழைய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காரைக்குடி அருகே சாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்டது சாக்கவயல் ஊராட்சி. இதற்கு உட்பட்டு சாக்கவயல் வடக்கு, தெற்கு, சுட்டி நெல்லிபட்டி, மலையந்தாவு, தச்சபிளான்பட்டி, குளப்படி ஆகிய கிராமங்கள் உள்ளன. சாக்கவயல் வடக்கு பகுதியில் 60 க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிலேயே புதிதாக 15 ஆண்டுகளுக்கு முன்னர் 20க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 6க்கும் மேற்பட்ட வீதிகள் உள்ளன. இதில் ஒரே ஒரு வீதிக்கு மட்டும் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை உள்ளது. மற்ற வீதிகள் அனைத்தும் சாலையே பார்க்காமல் 50 ஆண்டுகளுக்கு மேலாக அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. மழை பெய்தால் சேறும் சகதியுமாக தண்ணீர் குளம் போல் தேங்கி ஊருக்கு நுழைய முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இரவு நேரங்களில் சகதியில் மக்கள் விழுந்து எழுந்து செல்லும் நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் பயனற்ற நிலையே உள்ளது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த தமிழ்மணி கூறுகையில், சாலை இல்லாததால் எங்கள் பாடு திண்டாட்டமாக உள்ளது. மழைகாலங்களில் சகதியில் தான் நடந்து செல்கிறோம். அதேபோல் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு இங்குள்ள போரில் இருந்த மோட்டர் பழுது என அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். அதன்பிறகு அப்படியே கிடப்பில் போட்டு இருந்த சின்டெக்ஸ் டேங்கையும் எடுத்து சென்றுவிட்டனர். இதனை சரிசெய்து மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். அதேபோல் இப்பகுதியில் சாலை அமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : road ,
× RELATED 5 ஆண்டு திட்டம் போல் ஜவ்வாய் இழுக்கும் லெனின் வீதி சாலைப்பணி