×

திருவெறும்பூர் அருகே பஸ் சக்கரம் ஏறி சென்ட்ரிங் தொழிலாளி பரிதாப பலி

திருவெறும்பூர், நவ.7: திருவெறும்பூர் அருகே பஸ் சக்கரம் ஏறி படுகாயமடைந்த சென்ட்ரிங் தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.தஞ்சை மாவட்டம், பூதலூர் அருகே உள்ள சொரக்குடிப்பட்டியை சேர்ந்த சக்திவேலின் மகன் சரத்குமார்(25) மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர் உதயகுமார் ஆகிய இருவரும் சென்ட்ரிங் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று வேலைக்காக துவாக்குடி அருகே உள்ள அண்ணா வளைவிற்கு வேலைக்கு வந்துள்ளனர். அப்போது அவர்களை கட்டிட மேஸ்திரி புதுக்குடியில் வேலை நடக்கும் மற்றொரு கட்டிடத்திற்கு வேலைக்கு செல்லுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் அண்ணா வளைவு பேருந்து நிலையத்தில் இவர்கள் இருவரும் பஸ் ஏறுவதற்காக நின்றுகொண்டிருந்தனர்.

அப்போது திருச்சியிலிருந்து கும்பகோணம் செல்லும் தனியார் பேருந்தில் சரத்குமார் படிகட்டில் ஏறும் போது பஸ்சை டிரைவர் எடுத்துள்ளார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த சரத்குமாரின் காலில் பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கிய உடனே சக பயணிகள் சத்தம் போட்டதும் பஸ் டிரைவர் பஸ் நிறுத்தினார். இதில் சரத்குமார் கால் முறிவு ஏற்பட்டது. உடனே சக பயணிகள் சரத்குமாரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த சரத்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இச்சம்பவம் குறித்து சரத்குமாரின் தம்பி சத்யராஜ், துவாக்குடி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Tags : Thiruverumbur ,
× RELATED திருவெறும்பூர் அருகே சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாம்