திருச்சி, நவ.7: கொலை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகாத பிரபல ரவுடிக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.தஞ்சை மாவட்டம், பூதலூர் செக்கடி தெருவை சேர்ந்தவர் பாஸ்கர்(எ)நார்த் டி பாஸ்கர். இவர் மீது திருச்சி மாநகரில் பொன்மலை, அரியமங்கலம், பாலக்கரை, ஏர்போர்ட் உள்ளிட்ட காவல் நிலையங்களில் பணம் பறித்தல், மிரட்டல், கொலை முயற்சி, கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேநு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதில் கடந்த 2017ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்த பாஸ்கர் அதன்பின் ஜாமீனில் வெளியே வந்தார். அதன் பிறகு வழக்கு விசாரணையில் ஆஜராகாமல் இருந்தார் . இதற்கிடையில் கொலை வழக்கில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்த விசாரணை திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜராகாமல் பாஸ்கர் தலைமறைவாக உள்ளார். இதையடுத்து பிடிவாரண்ட் பிறப்பித்து மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். ஆனாலும் தலைமறைவான பாஸ்கரை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஏனெனில் போலீசார் என்கவுன்டர் செய்யும் திட்டத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொன்மலை இன்ஸ்பெக்டர் ரமேஷ், தலைமறைவாக உள்ள பாஸ்கரை பிடிக்க முடியவில்லை என கோர்ட் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாக உள்ள நார்த் டி பாஸ்கரை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.