×

வள்ளியூரில் வீட்டை உடைத்து துணிகரம் காருடன் ரூ.3 லட்சம் பொருட்களை அள்ளிச் சென்ற கொள்ளையர்கள்

வள்ளியூர், நவ. 7:வள்ளியூர் ராஜரத்தினம் நகரைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (60). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் மதுரையில் உள்ள தனது மகள் ஜெபராணி வீட்டிற்கு சென்று விட்டு நேற்று வீடு திரும்பினார்.
அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த டிவி, பாத்திரங்கள், மைக்ரோவேவ் ஓவன்,    அத்தியாவசிய பொருட்கள் மற்றும்  வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த கார் உட்பட ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இதுகுறித்து வள்ளியூர் போலீசில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார், கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது, பொன்ராஜ் வீட்டில் இருந்த காரில் பொருட்களை ஏற்றிக் கொண்டு மர்மநபர்கள் தப்பியது தெரிய வந்தது. இந்த காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். வள்ளியூர் ராஜரத்தினம் நகர், மின்வாரிய குடியிருப்புகளில் இதுவரை 10க்கும் மேற்பட்ட வீடுகளில் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஆனால் கொள்ளையர்கள் யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. மர்மநபர்களின் தொடர் கைவரிசையால் இப்பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Tags : robbers ,house ,Valliyur ,
× RELATED சேப்பாக்கம் புதிய அரசு விருந்தினர்...