×

திருவள்ளுவர் சிலையை களங்கப்படுத்தியதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அர்ஜூன் சம்பத்தை கைது செய்யுங்கள் போலீசில் புகார்

தஞ்சை, நவ. 7: திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு மற்றும் ருத்ராட்ச மாலை அணிவித்து களங்கப்படுத்திய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோரை தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டுமென போலீசில் புகார் செய்யப்பட்டது.தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக காவல் நிலையத்தில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இந்திரஜித் புகார் மனு அளித்தார். அதில் தஞ்சை பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கூட்டாக சேர்ந்து தஞ்சை மாவட்டத்தில் மத கலவரத்தையும், சாதிய மோதலையும் ஏற்படுத்தும் நோக்கத்தில் திட்டமிட்டு அவரது சிலைக்கு அவரது கோட்பாட்டுக்கு முற்றிலும் எதிரான திருநீறு பூசியும், காவித்துண்டு அணிவித்தும் ருத்ராட்ச மாலை அணிவித்துள்ளனர்.

இதன்மூலம் திருவள்ளுவரின் புகழுக்கு களங்கம் விளைவித்ததோடு எங்களது மனதையும் புண்படுத்தி மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய அர்ஜூன் சம்பத் உள்ளிட்டோரை தேசிய பாதுகாப்பு தடை சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதேபோல் தமிழ்த் தேசிய பாதுகாப்பு கழக மாநில இணை பொது செயலாளர் குணசேகரன் புகார் மனு அளித்தனர். அதில் தஞ்சை பிள்ளையார்பட்டியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது கட்சியினர் 50க்கும் மேற்பட்டோர் திருநீறு இட்டும், ருட்திராட்ச மாலை மற்றும் காவி துண்டை அணிவித்தும் சாதிய, மதவாத மோதலை ஏற்படுத்த வேண்டும், தேசத்தின் அமைதியை குந்தகப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டுள்ளனர். அவரது இச்செயல் சாதிய, மதவாத மோதலை தூண்டும் விதமாக அமைந்துள்ளது.எனவே தேச ஒற்றுமையை குலைக்கும் வகையில் செயல்பட்டு திருவள்ளுவரை அவமானப்படுத்திய அர்ஜூன் சம்பத் மற்றும் அவரது கூட்டாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.



Tags : Arjun ,arrest ,
× RELATED சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு...