×

1034வது சதய விழாவையொட்டி ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை பெருவுடையாருக்கு பேரபிஷேகம்




தஞ்சை, நவ. 7: தஞ்சையில் ராஜராஜ சோழனின் சதய விழாவையொட்டி அவரது சிலைக்கு 52 அமைப்புகள் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவையொட்டி பெருவுடையாருக்கு பேரபிஷேகம் நடந்தது.தஞ்சை பெரிய கோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1034வது ஆண்டு சதய விழா தஞ்சாவூரில் கொண்டாடப்பட்டது. விழாவின் முக்கிய நாளான நேற்று காலை 7 மணிக்கு பெரிய கோயிலுக்கு வெளியே உள்ள ராஜராஜ சோன் உருவ சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கலெக்டர் அண்ணாதுரை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து சதய விழாக்குழு தலைவர் துரை.திருஞானம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இதைதொடர்ந்து ராஜராஜ சோழன் சிலையில் இருந்து ஊர்வலமாக வந்த விழாக்குழு சார்பில் பெரிய கோயிலில் உள்ள பெருவுடையார், பெரியநாயகி அம்பாளுக்கு 42வது ஆண்டாக திருவேற்காடு கருமாரி பட்டர் அய்யப்ப சுவாமி தலைமையில் 48 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு பேரபிஷேகம், பெருந்தீப வழிபாடு நடந்தது. இதற்கிடையில் மங்கள வாத்தியம் முழங்க யானை மீது தேவாரம், திருவாசகம் அடங்கிய திருமுறைகள் வைக்கப்பட்டு நான்கு ராஜவீதிகளிலும் வீதியுலா நடந்தது.ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய ஏற்கனவே காவல் துறையிடம் பல்வேறு அரசியல் கட்சியினர், தமிழ் அமைப்புகள், சாதிய அமைப்புகள், இந்து அமைப்புகள் என 52 அமைப்புகள் அனுமதி கேட்டிருந்தனர்.

இதையடுத்து ஒவ்வொரு அமைப்புக்கும் குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி காவல்துறை அனுமதி வழங்கியது. அதன்படி நேற்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்து மக்கள் கட்சி, பாஜ, நாம் தமிழர் கட்சி, பெரிய கோயில் உரிமை மீட்புகுழு, அண்ணா திராவிடர் கழகம், மூவேந்தர் முன்னேற்ற கழகம், முக்குலத்தோர் புலிப்படை, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட 52 அமைப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு மங்கள இசையுடன் மேடைநிகழ்ச்சி துவங்கியது. ஆறுமுகம் குழுவினரின் நாதசங்கமம் இசை நிகழ்ச்சி, திருவையாறு ஆடல்வல்லான் நாட்டியாலயா குழுவினரின் பரதநாட்டியம், தமிழ் பல்கலைக்கழக பேராசிரியர் நல்லசிவத்தின் திருமுறை இசை சொற்பொழிவு, தஞ்சை பெரிய கோயிலின் கட்டுமான விந்தைகள் குறித்து பொறியாளர் ராஜேந்திரனின் ஒலி- ஒளி காட்சியும், இரவு கிராமிய இசைநிகழ்ச்சியும் நடந்தது.கும்பகோணம்: ராஜராஜ சோழனின் 1034வது சதய விழாவையொட்டி உடையாளூரில் உள்ள அவரது சமாதியில் பல்வேறு அமைப்புகள் உள்பட ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடையாளூரில் உள்ள ராஜராஜ சோழன் சமாதியில் கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதேபோல் ராஜராஜ சோழன் கல்வி பண்பாட்டு கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதைதொடர்ந்து சிவபாதசேகரானார் விழாக்குழு சார்பில் உடையாளூரில் உள்ள கைலாசநாதர் கோயிலில் இருந்து ராஜாராஜ சோழனின் உருவ சிலையை ஊர்வலமாக கொண்டு வந்து சமாதியின் முன்பு புலி கொடியேற்றப்பட்டது. பின்னர் சிறப்பு யாகம், 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. இதேபோல் திருநாகேஸ்வரம் பொதுமக்கள் சார்பில் ஏராளமான பெண்கள், முளைப்பாரியும், பூத்தட்டு, சீர்வரிசையுடன் ஊர்வலமாக வந்தனர். பாமக மாநில நிர்வாகி வைத்தி, முன்னாள் பாமக மாநில நிர்வாகி ஸ்டாலின், இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார், அண்ணாமலை சித்தர் சுவாமி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.பஞ்சவன்மாதேவி கோயிலில் சதய விழா: கும்பகோணம் அடுத்த பட்டீஸ்வரத்தில் உள்ள பஞ்சவன்மாதேவி கோயிலில் முதன்முறையாக ராஜராஜ சோழனின் சதய விழா நேற்று நடந்தது. நேற்று காலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. மாலை 5 மணிக்கு பந்தநல்லூர் மணிவண்ணன் தலைமையில் நாதஸ்வர இசை நிகழ்ச்சி, மாலை 6.30 மணிக்கு தஞ்சை கோவிந்தராஜன், கணபதி குழுவினரின் தவில் இன்னிசை கச்சேரி நடந்தது.

Tags : occasion ,centenary ,garland ,Rajaraja Chola ,Peruvian ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நூலகம் 5 லட்சம் பார்வையாளர்களை கடந்தது