அதிராம்பட்டினம், நவ.7: அதிராம்பட்டினம் பேரூராட்சியில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அதிராம்பட்டினம்- பட்டுக்கோட்டை ரோட்டில் செட்டித்தோப்பு பகுதியில் உள்ள வெள்ளக்குளத்தின் வழியாக அதிராம்பட்டினம் பத்திரப்பதிவு அலுவலகம் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத அளவுக்கு சாலை சேதமடைந்து காணப்படுகிறது. எனவே சேதமடைந்த சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த வீரையன் கூறுகையில், பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு அதிராம்பட்டினம் பேரூராட்சி மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினம்தோறும் பல வாகனங்களில் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அப்படி இருக்கையில் இந்த சாலை சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே பொதுமக்களின் நலன்கருதி உடனடியாக இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.