ஓமலூர், நவ.7: ஓமலூர் அருகே பெண் போஸ்ட் மாஸ்டரை வழிமறித்து 7 பவுன் நகையை பறித்து சென்ற ஹெல்மட் கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். சேலம் சித்தனூர் லட்சுமி நகரை சேர்ந்த முருகேசன் மனைவி சாந்தி. இவர், ஓமலூர் அருகே, முத்துநாயக்கன்பட்டி தபால் அலுவலகத்தில் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். கடந்த ஜூன் 31ம் தேதி, பணி முடிந்து டூவீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, ஹெல்மெட் அணிந்து அவரை பின் தொடர்ந்து வந்த 2 வாலிபர்கள், வட்டகாடு பகுதியில் சாந்தியின் டூவீலரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவரது கழுத்தில் இருந்த 7 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து பறந்தனர். இதுகுறித்து சாந்தி அளித்த புகாரின் பேரில், ஓமலூர் போலீசார் ஹெல்மெட் கொள்ளையர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று மாலை ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில், போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகப்படும்படியாக வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், அந்த நபர் சேலம் ஜங்ஷன் சாலையில் உள்ள சோடாகவுண்டர் தெருவை சேர்ந்த குமார் மகன் சரவணன் என்பதும், முத்துநாயக்கன்பட்டியில் போஸ்ட் மாஸ்டர் சாந்தி மற்றும் ஓமலூர் தனியார் மருத்துவமனை செவிலியரை வழிமறித்து நகை பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரை கைது செய்து 10 பவுன் நகையை பறிமுதல் செய்த போலீசார், மேலும் இந்த கொள்ளையில் தொடர்புடையவர்களை தேடி வருகின்றனர்.