கிருஷ்ணகிரி, நவ.7: கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பிரதமரின் கவுரவ நிதி வழங்கும் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளை சேர்க்கும் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. இது குறித்து கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பிரதமரின் கவுரவ நிதி வழங்கும் திட்டத்தில் விடுபட்ட விவசாயிகளை சேர்க்கும் சிறப்பு முகாம், கடந்த 4 மற்றும் 5ம் தேதிகளில் நாரலப்பள்ளி மற்றும் கோதிகுட்லப்பள்ளி கிராமங்களிலும், நேற்று (6ம் தேதி) ஜிஞ்சுப்பள்ளி கிராமத்திலும் நடந்தது. இன்று (7ம் தேதி) இட்டிக்கல் அகரம் கிராமத்திலும், நாளை (8ம் தேதி) பெத்ததாளப்பள்ளி, சோக்காடி ஆகிய கிராமங்களிலும் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், சிட்டா நகல், குடும்ப அட்டை நகல் ஆகிய ஆவணங்களை கொண்டு வர வேண்டும். அனைத்து அலுவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள், வருமான வரி செலுத்துவோர், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்ற தொழில்நுட்ப படிப்பு படித்தவர்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோரை தவிர, அனைத்து விவசாயிகளும் குடும்பத்திற்கு ஒருவர் வீதம் இத்திட்டத்தில் பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.