ரிஷிவந்தியம், நவ. 7: ரிஷிவந்தியம் அருகே மண்டகப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் மீனா (24). கீழ்பாடி கிராமத்தைச் சேர்ந்த கண்ணாயிரம் மகன் ரமேஷ் (24) என்பவர் காதலித்து ஏமாற்றியதாக, திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மீனா புகார் அளித்தார். அதன்பேரில், கடந்த ஜூன் 18ம்தேதி ரமேஷ் மற்றும் மீனா தரப்பினரை அழைத்து போலீசார் விசாரித்தனர். இதையடுத்து ரமேஷ்-மீனாவுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.அதன்பின் மண்டகப்பாடி கிராமத்தில் உள்ள மீனா வீட்டில் ரமேஷ் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஜூன் 27ம் தேதி ரிஷிவந்தியம் செல்வதாகக் கூறி, மோட்டார் சைக்கிளில் சென்ற ரமேஷ், ரிஷிவந்தியத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, காணாமல் போய் விட்டார்.
மீனா மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. இதையடுத்து மீனா ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் ஜூன் 27ம் தேதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து, காணாமல் போன ரமேஷை தேடி கண்டுபிடித்து மீனாவிடம் ஒப்படைத்தனர்.அதன்பின் சில மாதங்கள் மீனாவுடன் இருந்த ரமேஷ் கடந்த அக்டோபர் 9ம் தேதி கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ரமேஷ் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் ரமேஷ் கிடைக்கவில்லை.
இதுகுறித்து மீனா கொடுத்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்கு பதிந்து ரமேஷை தேடி வருகின்றனர்.