விழுப்புரம், நவ. 7: தமிழ்நாடு காவல்துறையில் 8,825 பணியிடங்களை பூர்த்தி செய்வதற்கான உடல்தகுதி தேர்வு நேற்று முதல் தொடங்கியது. விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கான தேர்வு நேற்று ஆயுதப்படையில் தொடங்கியது. முதல்நாளில் 831 பேர் பங்கேற்றனர். ஐஜி செந்தாமரைக்கண்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் 2,465 இரண்டாம்நிலை காவலர்கள் (ஆயுதப்படை), 5,962 இரண்டாம்நிலை காவலர்கள் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை), 208 இரண்டாம் நிலை சிறை காவலர்கள் மற்றும் 191 தீயணைப்போர் பதவி என 8,826 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 6ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து இதற்கான தேர்வு தமிழகம் முழுவதும் கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி 32 மாவட்டங்களில் 228 மையங்களில் நடந்தது. சுமார் 3 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள். விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை 17,114 ஆண்களும், 3,160 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 20,274 பேர் இந்த தேர்வை எழுதினார்கள். எழுத்து தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியாகின. இதனிடையே எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு உடல்தகுதி தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு நேற்று தமிழகம் முழுவதும் தொடங்கியது.
இதில் விழுப்புரம், கடலூர் இருமாவட்டங்களிலும் தேர்வானவர்களுக்கு உடல்தகுதி தேர்வு விழுப்புரம் கா.குப்பம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 2,389 ஆண்களும், 913 பெண்கள் என மொத்தம் 3,503 பேருக்கும் உடல்தகுதி தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதே போல் கடலூர் மாவட்டத்தில் எழுத்து தேர்வில் வெற்றிபெற்ற 1,637 ஆண்கள், 645 பெண்கள் என மொத்தம் 2,282 பேருக்கு உடல்தகுதி தேர்வில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
முதல்நாளான நேற்று விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 900 ஆண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நள்ளிரவு முதலே இளைஞர்கள் குவிந்தனர். காலை 7 மணிக்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு, மார்பளவு, 1,500 மீட்டர் ஓட்டம் ஆகியவை நடந்தது. இதில் 69 பேர் கலந்து கொள்ளவில்லை. 831 பேர் பங்கேற்றார்கள். இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக உடல்திறன் தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுகளை தலைமையிட ஐஜி செந்தாமரைக்கண்ணன், டிஐஜி சந்தோஷ்குமார், எஸ்பி ஜெயக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.