×

விருத்தாசலம் அருகே பைக் விபத்தில் டிரைவர் பலி

விருத்தாசலம், நவ. 7: விருத்தாசலம் அடுத்த சின்னப்பரூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல் மகன் பசுபதி (25). பொக்லைன் இயந்திர ஓட்டுனராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி ஓராண்டு ஆன நிலையில் தற்போது இவரது மனைவி பவானி (23) நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். நேற்று முன்தினம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக மனைவியை சேர்த்துள்ளார். பின்னர் அவருக்கு தேவையான துணி மணிகள் மற்றும் பொருட்கள் எடுத்து வர பைக்கில் வீட்டிற்கு சென்றுள்ளார். விருத்தாசலத்தில் இருந்து மங்கலம்பேட்டை செல்லும் சாலையில் எருமனூர்- ரெட்டிகுப்பம் இடையே சென்று கொண்டிருந்தபோது, திடீரென எதிரே வந்த பைக் பசுபதியின் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் பைக்கிலிருந்து தூக்கி வீசப்பட்ட பசுபதி படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து அறிந்த அப்பகுதியினர் விருத்தாசலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் பசுபதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் பசுபதி மீது மோதிய நபர் அதே பகுதியை சேர்ந்தவராக இருக்கலாம் எனவும், அதனால் அப்பகுதியில் தீவிர விசாரணை அவரை கைது செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி அவரது உறவினர்கள் நேற்று முன்தினம் இரவு அரசு மருத்துவமனை முன்பு திரண்டனர். விருத்தாசலம் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் விருத்தாசலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் பசுபதியின் இறப்புக்கு நீதி வழங்க வேண்டும், இவரது சாவுக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும் என கூறி அவரது மனைவி மற்றும் உறவினர்கள் மருத்துவமனையின் உள்ளே அமர்ந்து திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த விருத்தாசலம் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Tags : Driver Kills In Bike Accident ,
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி