×

கடலூரில் பரபரப்பு கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு

கடலூர், நவ. 7: கடலூர் வண்டிப்பாளையம் பகுதியில் மளிகை, அரிசி கடை என அடுத்தடுத்த கடைகளின் பூட்டை உடைத்து பணம் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். கடலூர் வண்டிப்பாளையம் சூரசம்ஹார தெரு பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ்(34). அதே பகுதியில் மளிகை மற்றும் காய்கறி கடை தனித்தனியாக வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கடை வியாபாரத்தை முடித்துக் கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை கடைகளுக்கு அருகில் வீட்டில் இருந்தவர்கள் பார்த்தபோது கடையின் பூட்டு மட்டும் உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த நிலையில், இது குறித்து பாக்யராஜுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே பாக்யராஜ் கடைக்கு வந்து பார்த்தபோது, மளிகை கடை, அதை தொடர்ந்து காய்கறி கடை என நான்கு பூட்டுக்களை உடைத்து கடையில் புகுந்து பணம் மற்றும் ஆவணங்கள் வைத்திருந்த பை உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து முதுநகர் காவல் நிலையத்திற்கு பாக்யராஜ் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கடைக்குள் புகுந்து திருட்டில் ஈடுபட்டவர்களின் கைரேகையை பதிவு செய்தனர். விசாரணையில், கடைகளின் பூட்டை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடி சென்றவர்கள் அருகில் இருந்த பாக்யராஜின் வீட்டிலும் ஜன்னல்வழியாக கம்பியை நீட்டி திருடும் முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. வண்டிப்பாளையம் பகுதியில் பிரதான சாலையில் கடைகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags : Theft ,thrift shops ,Cuddalore ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...