×

58 கிராம கால்வாய் பாசன விவசாயிகளிடம் ஆர்டிஓ பேச்சுவார்த்தை

உசிலம்பட்டி, நவ. 7: வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி, உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்த விவசாயிகளுடன் ஆர்டிஓ பேச்சுவார்த்தை நடத்தினார். உசிலம்பட்டி பகுதியில், 58 கிராம கால்வாய் பாசன பகுதிகளுக்கு வைகை அணையிலிருந்து நிரந்தரமாக தண்ணீர் திறக்கக்கோரி நவ.11ம் தேதி  உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்போவதாக பாசன விவசாயிகள் அறிவித்திருந்தனர். இந்நிலையில், உசிலம்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில், விவசாயிகளுடன் ஆர்டிஓ சௌந்தர்யா தலைமையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. டிஎஸ்பி ராஜா முன்னிலை வகித்தார். அப்போது விவசாயிகள், ‘58 கிராம பாசனக் கால்வாயில் வைகை அணைத் தண்ணீரை நிரந்தரமாக திறக்கவும், கால்வாயை பலப்படுத்தவும் அரசாணை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆர்டிஓ சௌந்தர்யா கூறுகையில், விவசாயிகளின் கோரிக்கைகள், மாவட்ட நிர்வாகம் மூலம் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அதுவரை விவசாயிகள் பொறுமை காக்க வேண்டும்’ என்றார். இதையடுத்து விவசாயிகளின் கோரிக்கை மனு, அனைவரின் முன்னாலும் வாசிக்கப்பட்டது. பின் பேச்சுவார்த்தை முடிந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், ‘எங்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றினால் மட்டுமே, போராட்ட திட்டம் மாறுபடும் என தெரிவித்தனர்.

Tags : RTO ,canal irrigators ,
× RELATED மதுரை மாவட்டம் கள்ளிக்குடி உர ஆலையை...