×

உலகத் தமிழ்ச்சங்க கட்டிடத்தில் உள்ள கீழடி அகழாய்வு பொருட்களுக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு

மதுரை, நவ. 7: உலகதமிழ் சங்க கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ள கீழடி அகழாய்வு பொருட்களுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே, கீழடியில் ஐந்து கட்ட அகழாய்வுகள் நடத்தப்பட்டன. இதில் 2,600 ஆண்டுகளுக்கு முன்பு நகர நாகரீகத்துடன் மக்கள் வாழ்ந்ததற்கான, பல ஆயிரக்கணக்கான தொல் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. இதில், 4 மற்றும் 5ம் கட்ட அகழாய்வில் எடுக்கப்பட்ட தொல்பொருட்கள், மதுரை தல்லாகுளத்திலுள்ள உலக தமிழ் சங்க கட்டிடத்தில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. இங்கு 2 அரங்குகளில் தொல்பொருட்கள் வரிசையாக வைத்து அதன் சிறப்புகள் தமிழ், ஆங்கிலத்தில் விளக்கப்பட்டுள்ளன. தங்கம், அணிகலன் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்ணாடி கூண்டுக்குள் பாதுகாப்புடன் உள்ளன. சங்ககால வாழ்க்கை முறை, மக்களின் எழுத்தறிவு, நீர்மேலாண்மை, கீறல் மற்றும் குறியீடுகள், கட்டிட தொழில் நுட்பம், வணிகம், கைவினைத் தொழில், இரும்பு உருக்கு தொழில்நுட்பம், வைகை நதிக்கரை நாகரீகம், நெசவு தொழில் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொல் பொருட்களாக இங்கு காட்சிபடுத்தப்பட்டுள்ளன. இங்கு 600க்கும் அதிக பொருட்கள் பார்வைக்கு இருக்கிறது. நவ.1ல் கண்காட்சி திறக்கப்பட்டு, பொதுமக்கள், மாணவர்கள் அனைத்து நாட்களிலும் தினம் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை இலவசமாக பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. தனி அரங்கில் 3டி தொழில் நுட்ப வசதியில், தொல்பொருட்களை தொட்டுப் பார்க்கும் உணர்வு தரும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவ.1 முதல் ஏராளமானோர் காலை துவங்கி இரவு வரை உலகத் தமிழ் சங்க கட்டிடத்தில் குவிந்து வருகின்றனர்.

இந்நிலையில், உலக தமிழ் சங்க கட்டிடத்தில் கீழடி அகழாய்வு பொருட்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்திய போலீசார் நிறுத்தப்பட்டு, 24 மணி நேர பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. * மதுரையைச் சேர்ந்த சுப்பிரமணியன் கூறும்போது, ‘கீழடியில் கிடைத்த தொல் பொருட்களை நேரில் பார்க்கும் உணர்வை இக்கண்காட்சி தருகிறது. எனவே இளைஞர்கள், மாணவ, மாணவியர் மட்டுமல்லாது குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து செல்கின்றனர். வெளிமாவட்டங்களில் இருந்தும் ஆட்கள் வருகிறார்கள். இவர்களுக்கென தனியாக குடிநீர், கழிப்பறை என அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்’ என்றார். மதுரை போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘கண்காட்சியில் கீழடி அகழாய்வில் கிடைத்த தங்கம் உள்ளிட்ட அரிதான பழமைப் பொருட்கள் பார்வைக்கு இருக்கிறது. இதன் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய தொடர் போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவில் 4 போலீசார் ஒதுக்கப்பட்டு, இந்த பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்னர்’ என்றார்.

Tags : World Trade Center ,
× RELATED உலக வர்த்தக மையத்திலிருந்து ஒன்றிய அரசு வெளியேற துண்டு பிரசுரம்