திண்டுக்கல், நவ. 7: திண்டுக்கல் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் துறைகள் இணைந்து மாவட்ட அளவிலான 9 முதல் 10ம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாபெரும் அறிவியல் கண்காட்சியை நடத்தியது. இளம் மாணவர்களின் அறிவியல் தொழில்நுட்ப அறிவை வெளிக்கொண்டு வருவதற்காகவும், அவர்களது படைப்பாக்க திறனை மேம்படுத்துவதற்காகவும் நடத்தப்பட்ட இக்கண்காட்சியில் 21 அரசு பள்ளிகள், 16 தனியார் பள்ளிகளை சேர்ந்த சுமார் 450 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கண்காட்சி ஒருங்கிணைப்பாளரும், விலங்கியல் துறை பேராசிரியருமான ஜீவிதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலகுருசாமி தலைமை உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் பாண்டிக்குமார், ஜான்பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டனர். தேர்வு செய்யப்பட்ட சிறந்த 16 அறிவியல் படைப்புகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் திண்டுக்கல் எஸ்டி ஜோசப் பெண்கள் பள்ளி, பட்டிவீரன்பட்டி என்எஸ்விவி மெட்ரிக் பள்ளிக்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரமும், நத்தம் டிகே அரசு மாடல் பள்ளி, ஒட்டன்சத்திரம் அக்ஷயா பள்ளிக்கு 2வது பரிசு ரூ.20 ஆயிரமும், காசிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல் வித்யாபார்த்தி பள்ளிக்கு 3வது பரிசு ரூ.15 ஆயிரமும், வடமதுரை கலைமகள் பள்ளி, திண்டுக்கல் எக்குடாக்ஸ் பள்ளிக்கு 4வது பரிசு ரூ.5 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் 8 பள்ளிகளுக்கு தலா ரூ.1000 ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு தொகையை கல்லூரி தாளாளர் ரத்தினம் வழங்கினார். இதில் கல்லூரி இயக்குனர் துரை, துணை முதல்வர் நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.