மேட்டுப்பாளையம், நவ.7: கவனக்குறைவினால் ஏற்படக்கூடிய சாலை விபத்துகளை தடுப்பதும், பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்து பாதுகாப்பாக சாலையில் பயணிப்பது குறித்து பள்ளி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு பூங்கா மேட்டுப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவில் நேற்று நடைபெற்றது.தனியார் கார் நிறுவனம், கோவை ரூட்ஸ் நிறுவனமும் இணைந்து மேட்டுப்பாளையத்தில் உள்ள தனியார் பள்ளியான சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளி வளாகத்தில் சாலை பாதுகாப்பு பூங்காவினை அமைத்துள்ளது. பூங்காவை நேற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ரூட்ஸ் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் ராமசாமி தனியார் கார் மேலாண்மை இயக்குனர் மஸகாசு யோஷிமுரா மற்றும் உதவித் தலைவர் நவீன் சோனி,ரூட்ஸ் இயக்குனரும், பள்ளி செயலருமான டாக்டர் கவிதாசன் மற்றும் பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மாணவ,மாணவிகள் சாலைகளில் பயணிக்கும்பொழுது சாலை விதிகளை எவ்வாறு கடைப்பிடிக்க வேண்டும்? கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். செல்போன் பேசியபடி சாலையில் செல்லக்கூடாது. நெடுஞ்சாலைகளில் பள்ளி, கல்லூரிகள் மருத்துவமனைகள் அமைந்துள்ள இடங்களில் எச்சரிக்கையுடன் பயணிக்க வேண்டும். கார் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்லும்பொழுது பாதுகாப்பாக பயணிக்க சாலைகளில் வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை குறியீடுகளை சாலையில் செல்பவர்கள் பார்த்து குறியீடுகளுக்கு தகுந்தவாறு வாகனங்களை இயக்க வேண்டும் என்பது குறித்து எளிமையாக மாணவர்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் சாலை பாதுகாப்பு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.