புதுக்கோட்டை, நவ.7: ஆலங்குடி பகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த பகுதிகளில் 95 சதவீதம் பேர் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இந்த சுற்றுவட்டார பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளிகள், தனியார் மேல்நிலை பள்ளிகள், அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளிகள் உள்ளது. இந்த பள்ளிகளில் இருந்து ஆண்டுக்கு ஆயிரக்கணாக்கான மாணவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர். இவ்வாறு தேர்ச்சி பெறும் மாணவர்கள் கலை அறிவியல் படிக்க வேண்டும் எனில் புதுக்கோட்டை அல்லது திருச்சி ஆகிய இரண்டு நகரங்களை நோக்கி செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இதனால் அவர்களின் குடும்பத்திற்கு அதிக செலவு ஏற்படுகிறது. குறிப்பாக திருச்சிக்கு சென்று வர ஒரு நாளைக்கு பேருந்துக்கு ரூ.150 செலவாகின்றது. மேலும் இதர செலவுகளுடன் ரூ.200 என்று வைத்துகொண்டாலும் மாதத்திற்கு ரூ.6 ஆயிரம் கண்டிப்பாக செலவு ஏற்படும். வருடத்திற்கு பல ஆயிரம் செலவு ஏற்படுகிறது. கல்லூரி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு செலவுகள் தனி. இந்த பகுதியில் உள்ளவர்கள் விவசாயிகள் என்பதால் இந்த படிப்பு செலவை சமாளிக்க முடியாமல் தினறுகின்றனர். இதனால் கடன் வாங்கும் நிலைக்கு செல்கின்றனர். இதனால் ஆலங்குடி பகுதியில் புதிதாக ஒரு அரசு கலை அறிவியல் கல்லு£ரியை தொடக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.