வலங்கைமான், நவ.7: வலங்கைமான் பேரூராட்சி ஒருவழிப்பாதை வழியே மின் இணைப்புகளை அறுத்து கொண்டு வந்த கண்டைனர் லாரி நிறுத்தப்பட்டதால் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாரியம்மன் கோயில் பகுதியிலிருந்து ராமர் சன்னதி வரை ஒரு வழிப்பாபதையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை துறைமுகத்திலிருந்து திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு நேற்று மதியம் 3 கண்டெய்னர் லாரிகள் ஒன்றன்பின் ஒன்றாக கும்பகோணம்-வலங்கைமான் வழியாக மன்னார்குடி நோக்கி சென்றது. இவற்றில் இரண்டு லாரிகள் வலங்கைமானில் உள்ள ஒருவழிப்பாதை வழியாக வராமல் நேராக சென்றது. இதில் மற்றொரு கண்டைனர் லாரி வலங்கைமானில் ஒருவழிப்பதை வழியாக வந்தது. லாரியின் மேற்பரப்பு வரும் வழியில் உள்ள மின் இணைப்புகளை அறுத்து கொண்டே தாறுமாறாக வந்தது.
இந்நிலையில் வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு மும்முனை மின்சாரம் செல்ல செல்லக்கூடிய வயரில் உரசியபோது அப்பகுதியில் நின்ற பொதுமக்கள் சத்தமிட்டதை தொடர்ந்து லாரி நிறுத்தப்பட்டது. அதனையடுத்து இச்சம்பவம் தொடர்பாக மின்வாரியத்திற்கு தகவல் தரப்பட்டு பின்னர் மின்வாரிய ஊழியர்களை கொண்டு மருத்துவமனைக்கு செல்லக்கூடிய மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் அரை மணிநேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.