×

ஒரே இடத்தில் 3 ஆண்டுகள் பணி முடித்த காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய உத்தரவு உள்ளாட்சி தேர்தல் எதிரொலி

வேலூர், நவ.7:உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியாகலாம் என்ற நிலையில் 3 ஆண்டுகள் பணி முடித்த காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அதுதொடர்பான பட்டியலை அனுப்பி வைக்கும்படி அனைத்து ஐஜி, டிஐஜி, எஸ்பிக்களுக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.
நீண்ட இழுபறிக்கு பின்னர் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் துரிதப்படுத்தியுள்ளது. இதற்காக ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அரசு பணியாளர்கள், அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்யும்படி அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக டிஜிபி பிறப்பித்துள்ள உத்தரவில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த தேர்தலை நேர்மையாகவும், அமைதியாகவும் நடத்த ஏதுவாக சொந்த மாவட்டத்திலோ அல்லது ஒரே இடத்திலோ 30.9.2019ம் தேதியுடன் மூன்றாண்டுகள் நிறைவு செய்த மற்றும் மூன்றாண்டுகளுக்கு மேல் பணியாற்றும் டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும்.மேலும் அதுதொடர்பான விவரங்களை வரும் 15ம் தேதிக்குள் டிஜிபி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த உத்தரவு அனைத்து ஐஜிக்கள், டிஐஜிக்கள், எஸ்பிக்களுக்கும் டிஜிபி அலுவலகம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : police officers ,
× RELATED தெலங்கானாவில் சந்திரசேகர ராவ்...