×

விளையாட சென்றதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

காடையாம்பட்டி, நவ.6: சேலம் மாவட்டம் காடையாம்பட்டி ஒன்றியம் கூ.குட்டப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட களுங்குபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன். இவர் சேலம் லீ பஜார் பகுதியில் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா. இவர்களது மூத்த மகன், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இளைய மகன் குகன்(19). இவர், மேச்சேரியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் 2ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த 1ம் தேதி விளையாட சென்ற குகனை அவரது தாய் லதா கண்டித்ததாக தெரிகிறது. இதனால், மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட குகன் தோட்டத்தில் செடிகளுக்கு அடிப்பதற்காக வைத்திருந்த விஷ மருந்தை குடித்து விட்டார். இதில், மயங்கி விழுந்த மாணவனை பெற்றோர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு குகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். விளையாடச் சென்றதை தாய் கண்டித்ததால் கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : College student ,suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை