விழுப்புரம், நவ. 6: கலவரத்தை கட்டுப்படுத்தும் வகையில் விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு ரூ.61 லட்சம் மதிப்பில் புதிய வருண் வாகனம் அரியானா மாநிலத்திலிருந்து வந்துள்ளது. விழுப்புரம் மாவட்ட காவல்துறையில் கலரவத்தின் போது அதனை கட்டுப்படுத்தி, கலவரக்காரர்களை பிடிக்கும் வகையில் ஏற்கனவே கண்ணீர்புகைகுண்டுகளை வீசும் வஜ்ரா, தண்ணீரை பீய்ச்சியடிக்கும் வருண் போன்ற வாகனங்கள் உள்ளது. கடந்த காலங்களில் தயாரிக்கப்பட்ட அந்த வாகனங்கள் தற்போதைய சூழலில் பெரும் கலவரங்களை கட்டுப்படுத்த காவல்துறைக்கு புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய வாகனங்கள் தேவைப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கு ரூ.61 லட்சம் மதிப்பில் கலவரத்தை கட்டுப்படுத்தக்கூடிய நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வருண் வாகனம் நேற்று ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அரியானா மாநிலத்திலிருந்து வந்துள்ள இந்த வாகனம் முறைப்படி நேற்று எஸ்பி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதனை எஸ்பி ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார், மேலும் இயக்கும் விதம், கலவரத்தை கட்டுப்படுத்தும் விதம் குறித்து கேட்டறிந்தார்.
இந்த புதிய வாகனத்தில் 12 ஆயிரம் லிட்டர் தண்ணீரை சேமித்து வைத்திருக்கமுடியும். மேலும் வாகனத்தின் உள்பகுதியிலிருந்தே நவீன தொழில்நுட்பத்துடன் இந்த தண்ணீரை பீய்ச்சியடித்து கலவரக்காரர்களை விரட்டியடிக்கமுடியும். மேலும் கலவரக்காரர்களை அடையாளம் கண்டு, கைது செய்ய ஏதுவாக கலர் பவுடர் தெளிப்பதற்கும், அரிப்பு பொடிக்கு தனியாக டேங்க் வசதியும் இந்த வருண் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த வாகனத்தில் பணியின் போது மூன்று தலைமைக்காவலர்கள் இருப்பார்கள். கலவர காலங்களின் போது இந்த வாகனத்தை பயன்படுத்தும் வகையில் விழுப்புரம் ஆயுதப்படையில் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.