சிவகாசி, நவ. 6:சிவகாசி நகராட்சியில் 2 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டிடத்தில் தரைத்தளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக கிடப்பதால் நோயாளிகள் அவதிப்படுகின்றனர். சிவகாசி நகராட்சி தாய், சேய் நல மையம் நகராட்சி கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மருத்துவமனை நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி தரப்பட்டது. புதிய கட்டிட கட்டுமான பணிகள் தரமாக நடைபெறவில்லை. இதனால் புதிய கட்டிடத்தின் சுவர்களில் ஆங்காங்கே விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர், மருந்தாளுனர், 3 செவிலியர்கள் பணிபுரிகின்றனர். இந்த மருத்துவமனையில் தினமும் 150க்கும் மேற்பட்டோர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதில் மருத்துவர் அறை, நோயாளிகள் காத்திருப்ப அறை முழுவதும் தரைத்தளம் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் நோயாளிகள் சிரமப்படுகின்றனர். மருத்துவமனையை சுற்றிலும் புதர் மண்டி கிடக்கிறது.
மருத்துவ கழிவுகள் மருத்துவனை வளாகத்தை சுற்றிலும் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பணியில் உள்ள மருத்துவர் அடிக்கடி வெளியூர் முகாம் சென்று விடுவதால் செவிலியர்களே சில நேரம் சிகிச்சை அளித்து வருகின்றனர். நகராட்சி ஆரம்பர சுகாதார நிலையம் வளாகத்தில் சமூக வீரோதிகள் சிலர் மது அருந்துவது, மலம் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. எனவே நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனை வளாகத்கை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து ஆரம்ப சுகாதார நிலை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘நகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பல லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டி தரப்பட்டுள்ளது. ஆனால் சுற்றுச்சுவர் இல்லாததால் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. இந்த மரு்துவமனையில் அனைவரும் தற்காலிகமாகவே பணிபுரிந்து வருகின்றனர். தினமும் அதிகமான நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதால் நிரந்தர பணியாளர்களை நியமிக்க பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.