×

சாயல்குடி கடல் பகுதியில் வெளிமாவட்டத்தினர் மீன்பிடிக்க உள்ளூர் மீனவர்கள் கடும் எதிர்ப்பு

சாயல்குடி, நவ. 6: சீலா மீன் சீசன் தற்போது துவங்கி இருப்பதால் சாயல்குடி கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடிக்கும், வெளிமாவட்ட மீனவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாயல்குடி பகுதியில் மன்னார் வளைகுடா கடல் பகுதியான கன்னிராஜபுரம் ரோச்மா நகர், மூக்கையூர் முதல் ஏர்வாடி வரை 20க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் சுமார் 3 ஆயிரம் மீனவர்கள் குடியிருந்து வருகின்றனர். ஆழமான பகுதியான கீழமுந்தல், மூக்கையூர், வாலிநோக்கம் கடல்களில் வல்லம், நாட்டு படகில் சென்றும், கரை வலை விரித்தும் மீன் பிடித்து வருகின்றனர். சில வாரங்களாக கனமழை, புயல் அபாயம் எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. தற்காலிக தடை தற்போது இல்லாததால் தற்போது இப்பகுதி மீனவர்கள் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகின்றனர்.

கூடுதல் விலையானாலும், அதிக விற்பனையாகும் சீலா மீன் சீசன் வரத்து தற்போது துவங்கி உள்ளது. இதனால் இப்பகுதி மீனவர்கள் கரைவலை மூலம் மீன்பிடிப்பில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இவர்களுக்கு போட்டியாக இப்பகுதியைச் சேர்ந்த மொத்த மீன் வியாபாரிகள், தனியார் மீன் கம்பெனியினர் சிலர் தூத்துக்குடி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, நாகப்பட்டிணம் ஆகிய வெளி மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களை வரவழைத்து, அதிக கூலி வழங்கி, அதிக குதிரை திறன் வேகம் கொண்ட ஆயில் எஞ்சின் படகுகள், தடை செய்யப்பட்ட பைபர் படகுகள் மற்றும் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலைகளை கொண்டு மீன் பிடித்து வருவதாக புகார் கூறப்படுகிறது. இதனால் பாரம்பரியமிக்க தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என சாயல்குடி மீனவர்கள் புகார் கூறுகின்றனர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : fishermen ,outsiders ,sea ,Sayalgudi ,
× RELATED விசாகப்பட்டினத்தில் பரபரப்பு...